மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் முருகப் பெருமானின் 5-ஆம் படைவீடாகும். முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து, அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் தணிகை எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும் இதற்குத் தணிகை என்று பெயரமைந்தது. இத்திருக்கோயில் சோழர் மற்றும் விஜய நகர காலத்தியது. மேலும், திராவிட கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.